கோவில்பட்டி ஊரின் மேல்புறம் கடைசி எல்லையில் பிரதான நெடுஞ்சாலையை விட்டு சற்றே ஒதுங்கி இருப்பது கதிரேசன் (கோவில்) மலை. அதொன்றும் பெரிய மலை இல்லை, பெரிய குன்று எனலாம். குன்றின் மேலே ஒரு முருகன் கோவில் உண்டு. ஒரே ஒரு தடவை அக்கோவிலுக்குள் சென்றிருக்கிறேன். பராமரிப்பின்றி பாழடைந்து போன அந்தக் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு சொர்ணமலை முருகன் கோவில் என்று வழங்கப்படுகிறது. கதிரேசன் மலை அடிவாரத்தில் தான் இலக்குமி ஆலை, ஆலைக் குடியிருப்பு பகுதி, பள்ளிகள் ஆகியவை மிகப்பெரிய வளாகமாக அமைந்துள்ளன.
இலக்குமி ஆலை மேல் நிலைப்பள்ளியின் ஒரு புற வகுப்புகளிலிருந்து பார்த்தால் மலை முழுதும் தெரியும். ஒரு அய்யர் பையன், மிதிவண்டியில் எப்படியோ மேலே போய் பூஜை செய்து விட்டு, பின் திரும்ப இறங்கும் போது முழு வேகத்தில் படிகளின் ஓரமாக இருக்கும் சரிவுகளில் மிதிவண்டியில் இறங்குவான். பார்க்க ஆச்சரியமாகவும் திகிலாகவும் இருக்கும்படியான வேகம்.
மலையடிவாரத்தில் புலிக்குகை என்றொரு குகை. தூரப்பார்வைக்கு சாதாரணமாக இருக்கும், பக்கத்தில் போனால் தான் அதன் பிரம்மாண்டம் தெரியும். குகையின் பின்புறம் வழியாக பாறை உச்சி வரை ஏறலாம். சில தடவை மேலேறிப் போய் மேலிருந்து வெடிகளை கொளுத்தி கீழே போட்டு விளையாடி இருக்கிறேன். ஊரில் பையன்கள் வீடுகளில் கோபித்துக் கொண்டு காணாமல் போனால் முதலில் அங்கே போய்த்தான் தேடுவார்கள். மரங்கள், பசுமை என எதுவும் இல்லாத பொட்டல் என்றாலும் அமைதியான, ஆளரவமற்ற ரம்மியமான ஒரு சூழல் அங்கு நிலவும். முன்பெல்லாம் பொங்கலுக்கு அடுத்த கரிநாள் அன்று மட்டும் மலையில் மக்கள் கூட்டம் மொய்க்கும். இப்போது கோவில் புனரமைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
குகை வாயிலை நெருங்கும் போது வவ்வால்களின் நடமாட்டமும், நாற்றமும் பயமுறுத்தும். அந்த குகை பற்றி பல கட்டுக்கதைகள் உண்டு.
அதில் ஒரு காட்டுமிராண்டி வசிப்பதாகவும், அவ்வப்போது ஊருக்குள் வந்து கண்ணில் பட்ட சிறுவர்களை குகைக்கு கடத்திச் சென்று கொன்று தின்பதாகவும் சின்ன வயதில் ரொம்ப பயமுறுத்துவார்கள்.
குகைக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்வதாகவும், குகைக்குள் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கும் மலை மேலிருக்கும் முருகன் கோவிலுக்கும் சென்று பூசை செய்வதாகவும் நோக்கம் போல கதை கட்டுவார்கள் பையன்கள்.
‘புலி உள்ளே இருக்கிறது, அதை நான் பார்த்தேன்’ என்று அடிக்கடி வதந்தி கிளம்பும். ஆனால் எடுபடாது.
ஒரு தடவை புளிய மரங்களை எல்லாம் நோய் தாக்கி, புளி சரியாக காய்க்காமல், புளிக்கு பஞ்சம் வந்து விட்டதாம். இலங்கையிலிருந்து கப்பலில் மலை மலையாக வந்த புளியை ஒரு வியாபாரி அங்கே பதுக்கி வைத்து விற்றானாம். அதிலிருந்து அதற்கு பெயர் ‘புளிக்குகை’ ஆகி காலப்போக்கில் ‘புலிக்குகை’ ஆகி விட்டதாம். இப்படி ஒரு கதை உண்டு.
இன்னொருவன் கொஞ்சம் மேலேயே போய், தான் ஆண்டு விடுமுறையில் உள்ளே போனதாகவும் அங்கே சுனை முழுவதும் பனியால் நிரம்பி இருந்ததாகவும் அதில் விளையாடியதாகவும் கப்சா விட்டு என்னிடம் அடி வாங்கினான்.
குகை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு ஒரு சுரங்க நீர்ப்பாதை இருப்பதாக அசைக்க முடியாத ஒரு செய்தி இன்னும் கூட நிலவுகிறது. (இது மெய்யா என இதுவரை எனக்குத் தெரியவில்லை).
குகைக்குள் ஒரு ஊற்றுச்சுனை இருக்கிறதாம். அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில் அது செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மிதக்கும் என்று சொல்வார்கள். (குகைக்கும், செண்பகவல்லி அம்மன் கோவில் குளத்துக்கும் ஒரு மைல் தூரம் இருக்கும்) ‘அதெல்லாம் அரைமணி நேரத்தில் வராது, அமாவாசைக்கு தான் வரும், பெளர்ணமிக்கு தான் வரும்’ என்று வாதிடும் வீணாப்போனவன்களும் இருந்தனர்.
‘அதெல்லாம் சரி, நீ இதை பாத்திருக்கியாலே?’ என்று பையன்கள் யாரிடமாவது கேட்டால் அவ்வளவுதான், ‘எங்க வீட்டுலே, எலுமிச்சம்பழ சர்பத் போடும் போதெல்லாம் என் அண்ணன் குகைக்குள்ளே போய் எலுமிச்சம்பழத்தை போடுவான், நான் தெப்பக்குளத்துக்கு போய் பழத்தை எடுத்துட்டு வந்து அதிலே தான் சர்பத் போடுவாங்க எங்கம்மா, அப்போதான் டேஸ்டா இருக்கும்’ என்று சர்வ சாதாரணமாக வாய்க்கு வந்தபடி அண்டப்புளுகு புளுகுவார்கள்.
கட்டபொம்மன் வெள்ளையர்களிடமிருந்து தப்பி சிலகாலம் அங்கு பதுங்கி இருந்ததாகவும் ஒரு கதை உண்டு. இது மாதிரி கதை சொல்லும் போது வரலாறு கண்டபடி திரிக்கப்படும். ‘கட்டபொம்மனோட நிஜப்பேரு கெட்டபொம்மன், அவரு ரொம்ப கெட்டவரு….’ என்கிற ரீதியில் கதை நீளும்.
இதுமாதிரியாகப்பட்ட கதைகள் புலிக்குகை மர்மம் பற்றிய ஆவலை பெருமளவு தூண்டி விட்டிருந்தன. அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே செல்லுதல், கண்ட பையன்களுடன் சேர்ந்து விளையாடுதல் ஆகியவை என் வீட்டில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தன. மலைப்பக்கம் நான் போகலாமா? என்று கேட்டாலே திட்டு நாறி விடும்.
ஒரு தடவை வீட்டில் யாரும் இல்லாத சமயம் வாய்த்தது. தெருப்பையன்கள் நான்கு பேர் திருட்டுத்தனமாக புலிக்குகைக்கு கிளம்பினோம். குகை இருட்டாக இருக்கும் என்பதால் தீப்பந்தம் தயாரிக்க கொஞ்சம் பழைய துணி, தீப்பெட்டி ஆகியவைதான் எங்கள் ஆயுதங்கள்.
அசை தொடரும்….