மரண வியாபாரிகள்
சில வாரங்கள் முன்பு குமரி மாவட்ட மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த போது நஷ்ட ஈடாக தமிழக அரசு ரூபாய் ஐந்து லட்சம் வழங்கியது. இச்சம்பவம் நடந்து சில வாரங்களில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்த போது முதலில் நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. பின்னர் ஈட்டுத்தொகை ஐந்து லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நமது அரசுகள் எவ்வளவு தூரம் திட்டமிடலின்றி மனம் போன போக்கில் செயல்படுகின்றன என்று தெரியும். ஒவ்வொரு முறை இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறும் போதும் ஈட்டுத் தொகை அறிவிப்பானது மக்களிடம் பெயர் வாங்க உதவும் அறிவிப்பாகவும் அரசாளும் கட்சியின் தாராளத்தைப் பறை சாற்றும் முரசாகவுமே உபயோகிக்கப்படுகின்றது புரியும். ஈட்டுத்தொகை அறிவிப்பானது சம்பவத்திற்கு சம்பவம் வேறுபடுகிறது. பேருந்து, சாலை, புகைவண்டி, விமான, தொழிற்சாலை விபத்துக்கள், இதர விபத்துக்கள் தீவிரவாத செயல்களில் பலியாவோரின் குடும்பத்தினருக்கும் ஈட்டுத்தொகை வழங்கப்படுவதில் ஒவ்வொரு நாளும் ஒரு தொகை அறிவிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சம்பவத்தின் அளவையும் தாக்கத்தையும் பொறுத்தே அமைகிறது. சம்பவமானது மாநில அளவிலோ, தேசிய அளவிலோ உலக குறிப்பிடத்தக்க வகையில் கவனத்தை ஈர்க்கும்படி அமைந்துவிட்டால் போதும்..... அறிவிப்புகள் அள்ளி வீசப்படும். லட்சக்கணக்கில் ஈட்டுத்தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, குடியிருக்க வீடு என்று மனம் போன போக்கில் கர்ண பிரபு போல அறிவிப்பார்கள்.
அமெரிக்காவில் கொரிய மாணவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகனாதனின் இறுதிச்சடங்கு அமெரிக்காவிலேயே நடந்த போது அவரது உறவினர்கள் பலரது பயணச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது, அவர்களுக்கு அமெரிக்கா செல்ல விசாவையும் அரசே சிரமேலிட்ட வேலையாய் ஏற்று வாங்கித் தந்து வழியனுப்பியது. ஆனால் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடையாளம் தெரியாமல் அடிக்கடி கருகும் உயிர்களுக்கு அளிக்கப்படும் விலை ஒன்று அல்லது இரண்டு லட்சங்களுக்குள்ளேதான் உள்ளது. பேராசிரியருக்கும் பட்டாசு தொழிலாளிக்கும் ஏன் இந்த பாகுபாடு, மரணத்தில் கூட.
வளைகுடா நாடுகளுக்குப் போய் விபத்திலும், முதலாளிக் கொடுமையிலும் உயிரிழக்கும் மக்களின் பெரும்பகுதி சொத்தே அவர்களின் உடலை இங்கு கொண்டு வர ஆகும் செலவில் கரைந்து விடுகிறதே. எத்தனை தொழிலாளிகளின் உடல்கள் வளைகுடா மருத்துவமனைப் பிணவறைகளில் கேட்பாரின்றிக் கிடக்கின்றன..... அமெரிக்க வாழ் பேராசிரியர் லோகனாதனுக்கு ஒரு சட்டம், துபாய் சித்தாளுக்கு ஒரு சட்டமா?
ஊடகங்கள் பரபரப்புக்காக எதையும் ஊதிப் பெரிதுபடுத்தத் தயங்குவதில்லை.
சில நாட்கள் முன்பு திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி ஓடும் காரிலிருந்து தள்ளி விடப்பட்டு, காயமடைந்து, கோமா நிலைக்குப் போய் அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். இதற்கு நமது பத்திரிக்கைகள் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்க வேண்டுமே..... பக்கம் பக்கமாக புகைப்படத்துடன் எழுதித் தள்ளி விட்டார்கள், தொலைக்காட்சியும் சளைக்கவில்லை. அமெரிக்கப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை....... என்று ரகளை செய்து விட்டார்கள். அதென்ன அமெரிக்கப் பெண்...... திருச்சியிலிருந்து போனவர் தானே திரும்பி வந்திருக்கிறார்.
சிறிதும் விவரம் தெரியாத, தமது உரிமைகள் என்னவென்றே தெரியாத பாமரர்களின் குடும்பம் தான் சீரழியும். கஞ்சிக்குப் போராடும் அன்றாடங்காய்ச்சிகள் வீட்டிலும் இது போலத்தான் நடக்கிறது. அங்கெல்லாம் ஊடகங்கள் நுழைவதில்லையே ஏன்?
சம்பவத்தின் தாக்கம் ஏற்படுத்தும் அடிப்படையில் தான் ஈட்டுத் தொகை இங்கு வழங்கப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சம்பவத்தை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்தி விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம் அதிகம் சிரமப்படத் தேவை இருக்காது. அதிகாரிகளே வீடு தேடி வந்து பெயருக்கு ஆறுதல் கூறி ஈட்டுத்தொகை காசோலை விவகாரம் வரை பார்த்துக் கொள்கின்றனர். சில நேரம் இழப்பீட்டுத் தொகைக் காசோலையை கைகளில் கொடுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டும் செல்கின்றனர்.
எல்லா மனித உயிர்களும் சமம் தானே. ஏன் இப்படி பாரபட்சம் காட்டப்படுகிறது? பணம் படைத்தவன், படித்தவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை மரண ஈட்டில்? பணம் படைத்தவனும் படித்தவனும் விமான விபத்திலோ அன்னிய நாட்டிலோ சாகும் போது ஏன் இந்த அளவு கரிசனம் காட்டப்படுகிறது? அவன் பிழைப்புக்கு தேசம் விட்டு தேசம் போகிறவன் தானே? இதே அளவு கரிசனம் பனை மரத்திலேறி விழுந்து உயிரிழந்த பின் நிராதரவாக நிற்கும் அவனது குடும்பத்தின் மீது எப்போதாவது காட்டப்பட்டிருக்கிறதா? சில ஆயிரங்கள் பிச்சை போல போடப்படுகிறது. அது கைக்கு கிடைக்கும் போது அம்மரணத்துக்குப் பின் அந்த குடும்பம் பட்ட கடனைத் தீர்க்கக் கூட அப்பணம் போதாது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு செய்யலாம்?
தேசிய அளவில் இது குறித்த விரிவான சட்டம் அல்லது சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இன்னின்ன நிகழ்வுகளுக்கு இவ்வளவு ஈட்டுத்தொகை அளிக்கலாம் என்று வரையறை செய்யப்படலாம். இந்த வரையறையானது விசாரணை அதிகாரியின் அறிக்கையின் படி திருத்தப்படலாம். இஷ்டத்திற்கு வரைமுறையின்றி ஈட்டுத்தொகை வழங்குதல் ஒழிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் குடும்ப நிலை, குடும்ப உறுப்பினர்களின் கல்வி அவர்களின் சொத்து ஆகியவை பற்றி முற்றிலும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே சென்று சேவைகள் வழங்கப்பட வேண்டும். (ஒருவர் விபத்தில் இறந்த பின் அவர் வீட்டு உறுப்பினர்கள் படும் தொல்லைகளைக் கண் கொண்டு காண இயலாது. இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அது இது என காகிதங்களை தயார் செய்யவே ஒரு மாதம் ஆகிவிடும்)
மரணத்தையும் விளம்பரமிட்டு புகழாதாயம் தேடும் நமது ஊடகர்கள், மக்கள், அரசியலர்கள் திருந்துவார்களா?